Friday 4 April 2008

துப்பாக்கி ஏந்துவது மட்டும்தான் தீவிரவாதமா?

மும்பையில் நாகரீக மக்கள் குடியிருக்கும் அந்தேரியில் "கிமாவத் ஹவுசிங் சொசைட்டி" என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அப்சல் என்பவரது குடும்பத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய குற்றம் ஒரு முஸ்லிமாக பிறந்தது மட்டும்தான். தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்காக ரூ. 1.25 லட்சம் பணம் கட்டியும் அவருக்கு இந்த அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பில் குடியிருக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அப்சல் குடும்பத்தினருக்கு எந்த விதமான உதவியும் செய்யக் கூடாது என்று குடியிருப்பு நிர்வாகிகளிடமிருந்து கண்டிப்பான உத்தரவு வேறு.

மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்த அக்குடியிருப்பு நிர்வாகிகளுக்கு, தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படுவதைப் போல கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

அப்சல் எனும் தனி மனிதனுக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதியல்ல இது. அத்வானி, மோடி, தாக்கரே போன்ற கைத்தேர்ந்த தீவிரவாதிகளால் சமூகத்தில் தூவப்பட்ட விஷ விதைகளின் விளைச்சல்தான் இது. மக்களை கூடி வாழவிடாமல் மத அடிப்படையில் அவர்களை பிரித்து வைத்திருந்தால்தானே குஜராத்தில் செய்தது போல தங்கள் இலக்குகளை இம்மி பிசகாமல் தாக்க முடியும். சாத்தான் வேதம் ஓதிய கதையாக இந்த ஓநாய்கள்தான் இன்று மதத்தீவிரவாதத்திற்கு எதிராக போலியாக ஊளையிடுகின்றன. நாட்டின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய தீவிரவாதத்தால் அச்சுறுத்தல் என் கூக்குரலிடும் இந்த போலி தேசியவாதிகள், இவர்களது மதவாத அரசியலால் நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையும் ஊசலாடிக்கொண்டிருப்பதை மட்டும் வசதியாக மறந்து விடுவார்கள்.

இஸ்லாமிய மதவெறியர்களின் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதம் உடலில் படும் வெட்டுக்காயம் போன்றது. அதன் விளைவுகள் உடனடியாக தெரியும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்துகூட அதை குணப்படுத்திவிடலாம். ஆனால் காவித் தீவிரவாதமோ கொடிய புற்று போன்றது. அதன் விளைவுகள் இதுபோல மெதுவாகத்தான் தெரியும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது மனிதகுலத்தின் முக்கிய உறுப்புகளான மனிதாபிமானம் மற்றும் சகிப்புத்தன்மையை செயலிழக்க செய்துவிடும்.

No comments: